தலையில் பாய்ந்த கத்தியுடன் 3 மணி நேரம் காரை...
தலையில் பாய்ந்த கத்தியுடன் 3 மணி நேரம் காரை ஓட்டியபடி மருத்துவமனைக்கு வந்த நபர்!
ரியோடி ஜெனிரோ: ஜுயாசெலோ நன்ஸ் டி ஆலி வெரியா என்பவர் பிரேசில் நாட்டில் உள்ள அகுயா பிரான்சா நகரை சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஆவார். சம்பவம் நடத்த அன்று இவருக்கும், மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர் ஆலி வெரியாவை 3 இடங்களில் கத்தியால் குத்தினார். இறுதியில் தலையில் குத்திய கத்தி அவரது கண் வழியாக பாய்ந்து பின்புறமாக வெளியேறியது.
அந்த கத்தியை வெளியே எடுக்க முடியவில்லை. இருந்தும் ஆலி வெரியா துணிச்சலுடன் சுமார் 3 மணி நேரம் தனது காரை ஓட்டிக் கொண்டே 97 கி.மீட்டர் தூரமுள்ள டெரேசினா நகரில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு மருத்துவர் சில்பர்போ அல்பு குவர்கூ தலைமையில் ஆபரேஷன் நடந்தது. பின்னர் அந்த கத்தி தலையில இருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து ஆலி வெரியா அதிசயமாக உயிர் தப்பினார்.
இது குறித்து மருத்துவர் கூறுகையில் அவர் தலையில் பாய்ந்த கத்தி 30 செ.மீட்டர் நீளமுடையது. கத்திக்குத்தில் அவர் கண் சிதைந்து பார்வை இழந்து விட்டார். மேலும் நுகரும் தன்னமையை இழந்து விட்டார். அதனால் அவரால் பொருளை நுகர்ந்து பார்க்கவோ, உணவில் சுவை அறியவோ முடியாது என்று கூறினார். ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடனும், உயிருடனும் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.