எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலிதீர்த்தே-உலகில்...

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏறற்ம் புரியவந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே,-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே!

3. ஓடி வருகையிலே,-கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் -உன்னைப்போய்
ஆவிதழுவுதடீ

4. உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி ;
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

5. கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி ;
உன்னைத் தழுவிடிலோ,- கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.

6. சற்றுன் முகஞ்சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடி
நெற்றி சுருங்க்கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.

7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடி ;
என் கண்ணில் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?

8. சொல்லு மழலையிலே,-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

9. இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே -உன்னைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. மார்பிலணிவதற்கே -உன்னைப்போல்
வைரமணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப்போல
செல்வம் பிறிதுமுண்டோ?


– பாரதியார்.


(மிகவும் ரசிக்கும் பாரதியின் பாடல் ..!)

நாள் : 5-Jan-15, 1:27 pm

மேலே