தாய்பாலை மறப்பதற்காக அன்னையை பிரிந்த நாள் முதலாய் உன்...
தாய்பாலை மறப்பதற்காக
அன்னையை பிரிந்த
நாள் முதலாய் உன்
போர்வைக்குள்தான்
என் தூக்கம்...
மதிய பொழுதுகளில்
ஏத்தம் தடக்கம்
விளையாடியது..
நீ வாய்பாடு கேட்டு
நான் பாதியிலேயே
விழித்தது..
திருவிழாவிற்கு சென்று
சேரும் முன்பே..
பாதி வழியிலேயே
உன் தோளில் தூங்கியது..
பாட்டுக் கச்சேரியை
பார்க்க சொல்லி
தூங்கிய என்னை
நீ எழுப்பியது...
கொலுசை தொலைத்ததால்
எல்லோருமே திட்டி தீர்க்க
வாங்கிக்கலாம் என்று
என் அழுகையை
நீ அடக்கியதென..
நான் எதையுமே
மறக்கவில்லை...
உன் போர்வையைவிட்டு
வெளியேறிய நாள் மட்டும்
நினைவிலில்லையே என்று
உன்னை அணைத்துக் கொள்ள
தோன்றுகிறது அப்பா...