மார்கழிப் பூக்கள் மலர் : 26 ஆதி சங்கரர்...
மார்கழிப் பூக்கள்
மலர் : 26
ஆதி சங்கரர் அருளிய சௌந்தர்யலஹரி
ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப் பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் விசேஷமானவை. முதலாவது: ‘ஸெளந்தரிய லஹரி'.
வட தேசங்களில் ஆதி சங்கரர் விஜய யாத்திரை செய்து கொண்டு இருந்த சமயத்தில், கயிலாயத்திற்கும் விஜயம் செய்தார். மௌன மான நிலையில் சங்கரர் அங்கே தியானம் செய்து கொண்டிருந்த சமயம் சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்யலஹரி சுவடிக்கட்டுக்களை சங்கரருக்கு வழங்கி ஆசிகளை புரிகிறார். . அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார். நந்தியின் ஸ்பரிசம் சங்கரர் மேல் படுகிறது.
சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது.. சங்கரர் மனம் மிக வருந்தி அழ, அச்சமயம் மேலே பார்க்கிறார். அங்கு பார்வதி, பரமேஸ்வரரின் திவ்ய தரிசனம் சங்கரருக்கு கிடைக்கிறது. . அம்பாளை நோக்கி “அம்மா! உமது லீலைதான் என்ன, ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிட்டியுள்ளது. நந்தி தேவர் இன்னொன்றை எடுத்துக் கொண்டுவிட்டார். கிடைத்த பொக்கிஷங்களை நான் தவற விட்டேன், என வருந்தினார். . உமையவாளோ சங்கரரைப் பார்த்து, , ‘‘சங்கரா! நீ அழாதே. என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது. உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். கவலையின்றி கிடைத்ததை வைத்துக்கொள்'’ என்றாள். சௌந்தர்யலஹரி இந்த வகையில்தான் உதயம் ஆனது.
சௌந்தர்யம் என்றால் அழகு. லஹரி என்றால் அலைகள். நூறு ஸ்லோகங்களிலும் அம்பாளின் பேரழகும், பேரருளும் அற்புதமாகத் தாண்டவமாடுகின்றன.
சௌந்தர்யலஹரியில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் மட்டுமே ஆச்சாரியாள் கையில் நின்றன. மீதி ஐம்பத்து ஒம்பது சுலோகங்கள் நந்திகேசுவரர் வசம் சென்று விட்டன. . அந்த ஐம்பத்து ஒன்பது சுலோகங்களையும் சங்கரர் தாமே மடை திறந்த வெள்ளம் போல் பாடி சௌந்தர்யலஹரியைப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி' உருவாயிற்று.
அதில் முதல் நாற்பத்தி யோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் ஆகியவை I பற்றிச் சொல்கின்றன. அதில் உபாசகர்களுக்கு தேவையான சங்கதிகள் நிறைய இருக்கின்றன.ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த பின்னால் உள்ள ஐம்பத்தொன்பது சுலோகங்களில் அம்பாளின் சிரசிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்கிற மாதிரி அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட கவின்மிகு விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் சிறு நகத்தளவு விக்கினம் ஏற்பட்டாலும் கூட, அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து பின்னால் வந்தவர்களால் ஒட்டுப் போட முடியவில்லை. இதே போலத்தான், ஆச்சாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது.
இப்படிப்பட்ட கவிதை திறன் நிறை பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆச்சாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உம்மையே நான் துதித்தேன்” என்று அடக்கத்துடன் பகிர்கிறார். அவளைத் துதிக்கிற கவிதை திறனும், அம்பாளது உபாசனையால் அவளது அருளால் சித்திக்கிறது என்றும் தெரிவிக்கிறார். பொதுவாக, அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி விசேஷமாக சித்திக்கிறது. சௌந்தர்யலஹரியின் தொண்ணூற்றி ஒன்பதாம் ஸ்லோகத்தின்படி, இதனைப் பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதி தேவியின் எல்லையில்லா அருளோடு, சரஸ்வதி கடாக்ஷமும், லக்ஷ்மி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்
--கடையநல்லூரான்