எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 84 ------------------------------------------ வாழ்க்கையில் நாம்...


​அனுபவத்தின் குரல் - 84 

------------------------------------------

வாழ்க்கையில் நாம் பலவற்றை காலம் கடந்து தான் உணர்கிறோம். சிலவற்றை அந்தந்த  காலத்தில் தவறவிட்டு விடுகிறோம். அது இயற்கையின் கோலமென்பதா அல்லது நமது அறியாமையின் அளவுகோலா என்று தெரியவில்லை. இவை அனைத்தையும் பின்னாளில் நினைத்து வருந்துவதும் வாடிக்கையாகி விட்டது மனிதனுக்கு. குறிப்பாக நமது இளம் பருவத்தில் ஆற்றிட வேண்டிய செயல்களை தெரிந்தோ , தெரியாமலோ செய்திடாமல் விடுவது தவறு என்பதை நினைத்து வருந்துவதும் இயல்பான ஒன்றாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை அதில் அதிக அனுபவம் உண்டு. 


வளரும் தலைமுறைக்கு,  இளைய சமுதாயத்திற்கு ஒரு அறிவுரையாக அல்ல ஆலோசனை வழங்கிட விரும்புகிறேன். இளமைக் காலம் என்பது  கடந்து விட்டால் மீண்டும் திரும்பி வராது. காலத்தில் விதைக்கும் வித்துக்கள் தான், பிற்காலத்தில் விளைந்து நமக்கு பலனை அளிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த காலகட்டத்தில் உழைக்கும் திறன் போன்று மீண்டும் பெற முடியாது. அப்போது நாம் செய்யும் சேமிப்பு போல மீண்டும் சில காலம் கடந்து நிச்சயம் செய்திடவும் இயலாது என்பதை எண்ணிப்  பார்க்க வேண்டும். நமது கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்திட வேண்டும். அந்த காலத்திலேயே நான் பலரும் கூறக் கேட்டிருக்கிறேன் . அதாவது மண்ணிலும் பொன்னிலும் பணத்தை போட்டால் என்றும் வீணாகாது, நிச்சயம் உதவிடும் என்று . உண்மையில் அது இரண்டும்தான் இன்றும் உண்மையாகி இருக்கிறது . அதன் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறையவில்லை . இன்றைய காலகட்டத்தில் அவை இரண்டும் சாதாரணமான நடுத்தர மக்களுக்கும் அதன் கீழே உள்ளவர்களுக்கும் ஒரு கனவிலும் கிடைக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது . 


சேமிப்பையும் முதலீட்டையும் எந்தெந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை  நமது முன்னோர்களும் பெரியோர்களும் ஏற்கனவே பலவழிகளில் கூறியுள்ளனர். ஆனாலும் நாம்தான் சரிவர கடைபிடிப்பதில்லை. முற்காலத்தில் பல அறிஞர்கள் வாழ்வியல் நுட்பங்களை, தத்துவங்களை வழங்கி  இருப்பது நாம் அறிந்த ஒன்றே. ஒரு சிலர் புத்திசாலிதனமாக நடந்து கொண்டாலும் பெரும்பான்மையானவர்கள் தவறிவிடுகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு வேறு ஒரு காரணம், பொதுவாக நாம் மற்றவர்கள் வழங்கும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பதில்லை. இதற்கு நான் என்னையே ஓர் உதாரணமாக கூற முடியும். 


இதை எனது அனுபவத்தின் குரல் மட்டும் அல்ல ஆலோசனையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ​


       பழனி குமார்               

நாள் : 12-Feb-18, 10:03 pm

மேலே