வாழ்க்கைப் பாடம் 20 ----------------------------------------- சமுதாயத்தில் பொதுவாக ஒரு...
வாழ்க்கைப் பாடம் 20
-----------------------------------------
சமுதாயத்தில் பொதுவாக ஒரு பேச்சு புழக்கத்தில் உள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஆனந்த வாழ்க்கை வாழலாம் என்று. அதேநேரத்தில் அதற்கு எதிர்மறையான பேச்சும் உண்டு. அதாவது பணம் மட்டுமே இருந்தால் போதாது. அதோடு ஆள் பலமும் அறிவு வளமும் சேர்ந்து இருந்தால் தான் ஒருவர் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்றும் , அவர் தான் என்றும் ஜெயித்துக் கொண்டே இருப்பார் என்றும் உண்டு .
இவையெல்லாம் வாழ்க்கையில் பொதுவாக கூறப்படும் வார்த்தைகள். ஆனால் எது சாத்தியம் ஆகும் என்பது நடைமுறை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதுதான் யதார்த்த நிலை.நாம் இதனை கூர்ந்து கவனித்து அலசி ஆய்ந்து பார்த்தால், நமக்கு தெளிவாக உணர்த்துவது என்னவெனில், பணம் மட்டுமே வைத்துக்கொண்டு ஆனந்தமாக வாழலாம் என்று நினைத்தால் அது தவறு. இதனால் ஆள்பலம் வேண்டுமானால் கூடும். அறிவு பலம் பணத்தால் கூடாது என்பது உண்மை. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
அதேபோல அறிவு பலம் மட்டுமே வைத்துக்கொண்டு ஆள் பலமும் பணபலமும் சேர்க்க முடியாது என்பதை பலரின் வாழ்வில் கண்டும் கேட்டும் இருக்கிறோம். அதுவும் இந்த காலத்தில் நிச்சயம் இயலாத காரியம்.ஒன்றை மட்டும் நான் புரிந்து கொண்டது அறிவுடன், ஆதரவாக ஆட்களும், பணமுடன் சேர்த்து உடல்நலமும் முக்கியம் என்பது தான். இதை எனக்கு நானே ஓர் உதாரணமாகக் கூறலாம். அனுபவங்கள் தான் பாடமாக மாறுகிறது எவருக்கும்.
ஆகவே அறிவோடு ஆள்பலமும் அதனுடன் உடல் நலமும் மிகவும் அவசியமான ஒன்று என்பது நான் பெற்ற அனுபவத்தின் வாழ்க்கைப் பாடம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது உண்மைதான்.
பழனி குமார்
03.01.2019
03.01.2019