நேற்று மாலை கால் மூட்டு வலி மிகவும் அதிகமாக...
நேற்று மாலை கால் மூட்டு வலி மிகவும் அதிகமாக இருந்ததால், நான் ஏற்கனவே அறிந்தவரும் பலமுறை அவரிடம் சிகிச்சைக்காக சென்று வருபவன் என்பதால் ( எலும்பு சிகிச்சை நிபுணர்) , அவரைக் காண சென்றேன். அது ஒரு தனியார் மருத்துவமனை. டாக்டர்கள் நேரம் கடந்து வருவதும் , அப்படியே வந்தாலும் உடனடியாக சந்திக்க முடியாத நிலை என்பது வழக்கமான ஒன்று. நமக்கும் பழகிவிட்டது .காரணம் நமக்கு முன்னரே சிலர் காத்திருப்பது மற்றும் டாக்டர் ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு இருப்பார். நான் சரியாக 4.00 மணிக்கு சென்றும் அவரை 6.30 க்குத் தான் காண முடிந்தது.
அவரைக் கண்டதும் நான் உடனடியாக கூறியது, நான் எதற்காக வந்தேன் என்பதே மறந்துவிட்டது சார் , காரணம் அதிக நேரம் காத்திருத்தல் என்றேன் . அவரும் சிரித்துக் கொண்டே நல்லதுதான் , உங்கள் வலியையும் மறந்து இருப்பீர்கள் என்றார். பிறகு பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு எனது பிரச்சினையை கேட்டறிந்தார் . வயதானால் எலும்பு தேய்வதும் , அதிக மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் , சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் காரணம் என்றார். பிறகு அவர் இரண்டு மாத்திரைகளை எழுதி கொடுத்து நிரந்தரமாக இதை சாப்பிடுங்கள் என்றார் . பின்பு ஒரு வலி நிவாரண ஜெல் (Gel )ம் எழுதி கொடுத்தார் .
அங்கே அமர்ந்திருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் நான் கண்ட காட்சிகள் மனதை வலிக்க செய்தது . பலர் வருகின்றனர் . பலவித நோய்கள் காரணமாக . ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கமும் ,அதைவிட கீழ் நிலையில் உள்ளவர்களும்தான் . அனைவரின் முகத்திலும் ஒருவித கலக்கம் தெரிந்தது. காரணம் நோயின் தாக்கம் மட்டுமல்ல , என்னென்ன சோதனைகள் செய்ய சொல்வார்களோ , எவ்வளவு செலவு ஆகும் என்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும் . இதை ஒரு சிலர் பேசிக்கொண்டதை நேரிடையாக கண்டும் கேட்டதும் தான் . அவரவர் நிலையை கண்டு வருந்தியதும் , அதனால் என் நெஞ்சம் அழுததும் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .
அரசாங்க மருத்துவ மனைகளில் வரிசையில் நின்று காத்திருக்கும் வறுமையில் உழலும் உள்ளங்களின் நிலையையும் எண்ணிப் பார்த்தேன் . அங்கும் வசதியும் வாய்ப்பும் வருமானமும் சிபாரிசும் இருந்தால்தானே முன்னுரிமை இன்றும் .
இந்நிலை என்றுதான் மாறுமோ ?
பழனி குமார் 24.08.2019