எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

24 வயதான பர்சூரி ஸ்வாதி, சில மணி நேரங்களில்...

24 வயதான பர்சூரி ஸ்வாதி, சில மணி நேரங்களில் அவரது வீட்டுக்கு ஆவலுடன் ஓடோடிச் சென்றிருப்பார். பெற்றோர், உற்றார் உறவினர் அவரை ஆவலுடன் வரவேற்றிருப்பார்கள். ஆனால் ஸ்வாதியின் பயணம் இன்று காலை திரும்பாப் பயணமாகி விட்டது.

கடந்த ஜனவரி மாதம் தான் ஸ்வாதி பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். 4 மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு ஸ்வாதி தனது சொந்த ஊருக்கு நேற்று (புதன் கிழமை) புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மரணத்தில் பிடியில் சிக்கிக் கொண்டார். எம்.டெக். பட்டதாரியான ஸ்வாதி, கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4 பெட்டியில் பயணித்துள்ளார். அந்தப் பெட்டியில் தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அவர் உயிர் பிரிந்தது.

ஸ்வாதியின் பாட்டி கட்ரகட்டா ராஜ்யலக்‌ஷ்மி கண்ணீருடன் கூறியதாவது: "டிக்கெட் கிடைக்காததால் தட்கல் முறையில் டிக்கெட் வாங்கியதாக ஸ்வாதி கூறினாள். அவளை, விஜயவாடாவில் இருந்து அழைத்து வர அவளது தந்தை செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் இந்த துயரம் நடந்துவிட்டது".

ஸ்வாதி படிப்பில் மிகவும் கெட்டிக்காரி, எங்கள் வீட்டு பொக்கிஷம் அவள் என அவரது தாத்தா சத்ய நாராயணன் கூறினார்.

ஸ்வாதிக்கு, பிரதயுமா என்ற சகோதரர் இருக்கிறார். அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் பயின்று வருகிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி. அண்மையில் தான் அவரது தந்தை கிராமத்தில் இருந்து குண்டூருக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

ஸ்வாதி அவரது பள்ளிக்கூட தோழரை திருமணம் செய்ய இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். ஸ்வாதியின் தந்தை பர்சூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி சென்னைக்கு விரைந்துள்ளனர்.

நன்றி : தி ஹிந்து; (தமிழ்)


தமிழில்: பாரதி ஆனந்த்.

நாள் : 1-May-14, 9:58 pm

மேலே