எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது வாழ்க்கை ! ------------------------------- பருவத்திற்கேற்ப , வயதிற்கேற்ப...

  எனது வாழ்க்கை !

-------------------------------
பருவத்திற்கேற்ப , வயதிற்கேற்ப ,வளர்ச்சிக்கேற்ப , தனது நிலைக்கேற்ப மனிதன் மாறுகிறான் தோற்றத்தில் ,அறிவில் , ஆற்றலில் , சூழலில், பொருளாதார நிலையில், வசதி வாய்ப்புகளில் ...! பிறக்கும் எவருக்கும், தான் வாழப்போகும் காலமும் அறியாது , முடிவும் தெரியாது . வருங்கால சூழ்நிலை தெரியாது . 

ஆனால், அவரவர் தனக்குள் ஒரு கொள்கையை மையமாக வைத்துஅதை பின்பற்றுவதும் , இலக்கு ஒன்றை தேர்வு செய்து அதனை நோக்கி ஓர் இலட்சியப் பாதையில் பயணிப்பது தான் வாழ்க்கை .அந்த நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்று தெரியாமல் தொடர்கின்ற நிலை தான் அனைவருக்கும் !!!!

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவது, இல்லையெனில் துவளாமல் ,தளராமல் தொடர்ந்து நடை போடுவது என்பது காலத்தின் கட்டாயம் . இறுதியில் முடிவது தான் வாழ்க்கை ! 

அந்தவிதத்தில் தான் எனது வாழ்க்கையும் !!!!

நடந்து முடிந்ததை அசைபோட்டுக் கொண்டு , நடக்க இருப்பதை கற்பனையில் வடிவமைத்து, காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பவன் நான் . எள்ளளவும் பாதை தவறாத கொள்கை, வெற்றி பெறாத லட்சியம் , முடிவு பெறாத நோக்கம் , நிலை மாறாத நெஞ்சம் , அடிக்கடிக் குன்றிவிடும் உடல்நலம், எதிர்பாராத உலகச் சூழல் , திருப்தி இல்லாத நாட்டு நடப்பு என நகர்கிறது .

உள்ளத்தில் உறங்குகிறது சில உண்மைகள் .
நெஞ்சில் படிந்துள்ளது நீறு பூத்த நெருப்பாக சில நோக்கங்கள் .
மனதில் உறைந்துள்ளது சில நிறைவேறா இலட்சியங்கள் .
இதயத்தில் மறைந்துள்ளது மரணித்த சில நிகழ்வுகள் .

நடப்பவை நடக்கட்டும் என்ற மன உறுதியுடன் தொடர்கிறேன் நான் முடிவின் முடிவை அறியாத ,ஒரு சாமானியனாக ,சராசரி மனிதனாக ,மண்ணில் ஒருவனாக , மொழியால், இனத்தால் ஒரு தமிழனாக ! உணர்வால் , பற்றால் இந்தியனாக !


பழனி குமார்
  10.10.2021 

(எனது ஒரு வயது படம் )

நாள் : 11-Oct-21, 6:38 am

மேலே