பனித்துளி விலாசம்

பனி மலையில்
காவல் காக்கும்
பனித்துளிகளே

ரத்தம் உறையும்
பனியில்
நாட்டை காக்கும் வெறியோடு
ரத்தம் சூடேறி நிற்கும்
வீரர்களே
உங்கள் விலாசம் இந்தியா

எழுதும் போது உங்களை
நினைத்து கொள்ளும் அளவிற்கு
மற்ற நேரங்களில் நினைப்பது இல்லை
வெட்க்க பட்டு
சொல்லி கொள்வது
நான் மட்டும் அல்ல
இந்தியன் என சொல்லி கொள்ளும்
பாதி பேர்

எதிரி பயத்தை
நீங்கள் போக்கியதால்
எங்களுக்கு உள்ளேயே
மோதி கொள்கிறோம்
சாதி என்றும்
மதம் என்றும்

பனித்துளிக்கும்
உங்களுக்கும்
நிலையில்லா வாழ்க்கை
ஆனால்
பொறுப்பற்று
உயிரோடு வாழ்பவர்களை விட
உங்கள் இறப்பு
புனிதம் அடைகிறது

கடவுளை நம்பி
தூங்கி கொண்டு இருக்கிறோம்
காப்பது நீங்கள் என்று மறந்து

நாட்டிற்காக
வரியை கூட
தர மறுக்கும்
குடிமகனுக்கு மத்தியில்
உயிரை கொடுக்கும்
உங்களை
இந்த நாடே
வணங்க கடமை பட்டு இருக்கிறது

காந்தி என்ற
ஒரு மனிதன்
வாங்கி தந்த
சுதந்திரத்தை
இன்று
பல காந்திகள்
காத்து வருகின்றனர்
எல்லையில்

பெற்ற மகனே
பெற்றோரை நினைக்காத
இந்த காலத்தில்
இந்த நாடே
பெற்றோராய்
நினைக்கும் உங்களை
வணங்கி மகிழ்கிறேன்

எதுவும் நடக்காது
என்ற நம்பிக்கையில் வாழும்
மனித இனத்தில்
எதுவும் நடக்கும்
என்ற அச்சம் கொண்ட
உங்கள் வாழ்க்கையை
பகிர்ந்து கொண்ட
உங்கள் மனைவிமாரும்
நாட்டை காக்கும்
ராணுவ வீரராய்
நான் கருதுகின்றேன்



கேட்டவர் : கார்த்திக்
நாள் : 19-Aug-14, 12:07 pm
0


மேலே