கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்திலே-அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே!-ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே!-அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ?ஒரு
மருந்திதற் கிலையோ!-செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் கரும்புத் தோட்டத்திலே

பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே!நினது
எண்ணம் இரங்காதோ?-அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ?-தெற்கு
மாகட லுக்கு நடுவினிலே,அங்கோர்
கண்ணற்ற தீவினிலே-தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்-அந்தக் கரும்புத் தோட்டத்திலே

நாட்டை நினைப்பாரோ?-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ?-அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டும் உரையாயோ?-அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் கரும்புத் தோட்டத்திலே

நெஞ்சங் குமுறுகிறார்-கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே-அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ!ஹே!
வீர கராளி,சாமுண்டி,காளீ!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 11:34 am)
பார்வை : 18


பிரபல கவிஞர்கள்

மேலே