தோத்திரப் பாடல்கள் தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன்,
தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய்,
கேட்டவரந் தருவாய்.
1

பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய்,
குறைகளெல்லாம் தீர்ப்பாய்.
2

எப்பொழுதும் கவலையிலே
இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன்
உனதருளால் வாழ்வேன்.
3

சக்தியென்று நேரமெல்லாந்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்துந் தீரும். 4

ஆதாரம் சக்தியென்றே
அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழிலாம்.
5

துன்பமே இயற்கையெனும்
சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்.
6

நம்பினார் கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு ;
அம்பிகையைச் சரண்புகுந்தால்
அதிகவரம் பெறலாம். 7

[பாட பேதம்]: நான்மறையின் தீர்ப்பு -- பாரதிதாசன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:06 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே