உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலினீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை போய்யாமோ?- இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்திக் காட்சி நித்தியமாம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:54 pm)
பார்வை : 313


பிரபல கவிஞர்கள்

மேலே