விடுதலை

வேண்டுமடி யெப்போதும் விடுதலை, அம்மா!

சரணங்கள்

தூண்டு மின்ப வாடைவீசு துய்யதேன்கடல்
சூழநின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி
எம்மோ டமுத முண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
விண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மைதுன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வைய முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி)

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில்எம்மை யுரிமைகொண்டு பற்றி நிற்கவே
நண்ணியமரர் வெற்றி கூற
வண்ணமினிய தேவமகளிர்
மருவநாமும் உவகைதுள்ள (வேண்டுமடி)


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 1:02 pm)
பார்வை : 143


பிரபல கவிஞர்கள்

மேலே