குயிலின் காதற் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்:மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்,
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்

ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன்.மரத்தருகே போய்நின்று
“பேடே!திரவியமே!பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென் பேசாய்!”எனக்கேட்டேன்.

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந்தீயுற நின்றேன்
“காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”என்றதுவால்
“வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்
காதலர்நீ யெய்துலாக் காரணந்தான் யா”தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலி கதைசொல்ல லாயிற்று:-
“மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்,

உண்ம முழுதும் உரைத்திடவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.
அறிவும் வடிவுங் குறுகி,அவனியிலே
றியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ,
யாவர் மொழியு எளிதுணரும் பேறுபெற்றேன்;
மானுடர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,

நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே;என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன்,இல்லையெனில்,
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”என்றதுவே,
சின்னக் குயிலதனைச்செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில்,உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை,
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச்

சோலைக் கிளியிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்;
“காதல் வழிதான் கரடுமுரடாமென்பர்;
சோதித் திருவிழியீர்!துன்பக் கடலினிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்;

அல்லற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும்.மறவாதீர்,மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்,

ஆவி தரியேன்.அறிந்திடுவீர் நான்காநாள்,
பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்;
சென்று வருவீர்,என் சிந்தைகொடு போகினிறீர்,
சென்று வருவீர்”எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிலுங்கூறி மறைந்ததுகாண்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 2:11 pm)
பார்வை : 18


பிரபல கவிஞர்கள்

மேலே