தோத்திரப் பாடல்கள் மஹாசக்தி வெண்பா

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி -- அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.
1

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்த லறியாமை; -- தஞ்சமென்றே
வையமெலாங் காக்கு மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்ற லறிவு. 2

வையகத்துக் கில்லை, மனமே, நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன் -- பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். 3


எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம்-பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு.

4


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:11 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே