தற்செயலாய் என் நிழலை

தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன்
அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன்.
வீட்டுக்குத் திரும்பிவந்து முகத்தைப் பார்த்தேன்
அண்ணன் முகம் பிம்பத்தில் கலங்கப் பார்த்தேன்
இது என்ன இவ்வாறாய்ப் போயிற் றென்று
தெருவுக்குத் திரும்பிவர ஒருத்தன் என்னைப்
பேர் சொல்லிக் கூப்பிட்டான். நானும் நின்றேன்
அவன்தானா நீ என்றான் இல்லை என்றேன்.
அவனைப் போல் இருந்தாய் நீ அழைத்தேன் என்றான்
சில சொற்கள் நான்பேசத் தொண்டைக்குள்ளே
அவன் இசைந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டேன்
தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை
ஆனதற்குப் பக்கத்தில் ஆமை தீய்ந்து
வாசமெழ சுவாசித்தேன் அண்ணா என்று.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:28 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே