பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

நன்மையி லேயுடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

வண்மையி லேயுளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)


ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
யீட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:52 pm)
பார்வை : 432


பிரபல கவிஞர்கள்

மேலே