கண்ணீர் கவிதை- சொல்லைக் கல்லாக்கி…

சொல்லைக் கல்லாக்கி…
கவிதையைக் கவண் ஆக்கி…
வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி
கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை..
இல்லை..
வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது…
கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு
கண்ணீர் அஞ்சலி…
ஒரு
புலிப் போத்தை ஈன்று
புறந்தந்து-
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

மாமனிதனின்
மாதாவே ! – நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை ;
மடி சுமந்தது நாலு பிள்ளை !
நாலில் ஒன்று – உன்
சூலில் நின்று – அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது ; உன் -
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று…
சூளுரைத்து – சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது ;
நீல இரவில் – அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா !
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட – உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது !

‘தம்பி !
தம்பி !’ என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் -
இனம்
இருந்தது – அந்த…
நம்பியை
நம்பி;
அம்மா !
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி !

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை…
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்டவெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
தப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த…
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி !

‘இருக்கிறானா ?
இல்லையா ?’
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர் ;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு -
அரும்பொருள் ஆன
பிரபாகரன் !

அம்மா ! இந்த
அவல நிலையில் – நீ…
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய் !
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி -
வந்தாய் சென்னை; அது -
வரவேற்கவில்லை உன்னை !
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது !

இனி
அழுது என்ன ? தொழுது என்ன ?
கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன ?
பார்வதித்தாயே ! – இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே !
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத – எங்கள்
தமிழ்மண் -
நிரந்தரமாய்த்
தேடிக்கொண்டது பழி !

- கவிஞர் வாலி


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 12:34 pm)
பார்வை : 118


பிரபல கவிஞர்கள்

மேலே