அவளை மறந்துவிடு

மறந்துபோ நெஞ்சே அந்த
வஞ்சியை நினைக்க வேண்டாம்
இறந்துபோ என்றே என்னை
இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
ஒட்டாரம் என்ன சொல்வேன்?

மருந்துகேள்! அவளை நெஞ்சே
'மறந்துபோ' துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியு தட்டை
அவள்அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
மலர்மேனி இருந்தால் தானே?

பாலோடு சீனி யிட்டுப்
பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
விரைவோடு மறைந்து போவாள்
சேல்ஓடும் போது பின்னே
சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன்அ வள்பால்
பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!

ஏட்டினில் கவிதை தன்னில்
இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
குளிரிளம் பிறையும் என்றன்
வீட்டினில் திருவி ளக்கும்
அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
கவலைக்கு மருந்து நெஞ்சே!

எனைக்கண்ட தோழன் காதில்
ஏந்தினழ பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
தையலாள் வரும்வ ரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
மறந்துபோ எனது நெஞ்சே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 5:01 pm)
பார்வை : 20


மேலே