அந்தந்த வயதுகளில்.

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:40 pm)
பார்வை : 86


மேலே