வாய்மையே வெல்லும் Vaimaye Vellum

ஒரு நாட்டின் அரசன் இறந்து விட்டான். அவனுக்கு வாரிசு இல்லை. வாரிசை தேர்ந்து எடுக்க அமைச்சர் ஒரு போட்டி நடத்தினார். போட்டியில் கலந்து கொள்ள முரசு அறைந்து இளைஞர்களை அழைத்தார்கள். 25 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். அமைச்சர் அந்த இளைஞர்களிடம் நெல் விதைகள் கொடுத்தார். இந்த விதைகளை உங்கள் வயலில் விதையுங்கள். யார் வயலில் நெல் பயிர் உயரமாக வளர்கிறதோ அவர் அரசனாக முடிசூட்டப் படுவார் என்று அமைச்சர் அறிவித்தார்.

இளைஞர்கள் தங்கள் வயலுக்குச் சென்று நெல்லை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள் நிறைய உரம் வைத்தார்கள். இரண்டு மாதம் கழித்து வயல்களைப் பார்க்க அமைச்சர் சென்றார். எல்லா வயல்களிலும் நெல் பயிர் நன்கு வளர்ந்து நின்றது. ஒரே ஒரு வயலில் மட்டும் பயிர் விளையவே இல்லை.

அந்த இளைஞனைப் பார்த்து உன் வயலில் மட்டும் ஏன் பயிர் விளையவில்லை என்று அமைச்சர் கேட்டார். ‘அய்யா நீங்கள் கொடுத்த விதையைத்தான் விதைத்தேன். அது முளைக்கவே இல்லை’ என்று இளைஞன் சொன்னான். அப்போது அமைச்சர் கூறினார். நான் கொடுத்த நெல் முளைக்காது. ஏனென்றால் அது அவித்த நெல். அது முளைக்காமல் போகவே மற்ற இளைஞர்கள் வேறு நெல்லை விதைத்து நீர் பாய்ச்சி நல்ல உரம் போட்டு பயிரை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நீ மட்டும் அப்படிச் செய்யவில்லை. உண்மையாக நடந்து கொண்டாய். அதனால் நீ தான் அரசன் ஆவதற்கு தகுதியானவன் என்றார்.

இதை ஊரார் ஒப்புக் கொண்டார்கள். அந்த இளைஞனுக்கு அரசன் என்று முடிசூட்டப்பட்டது.

எழுதியவர் : (8-Sep-15, 4:38 pm)
சேர்த்தது : Abitha
பார்வை : 11984

மேலே