அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!

எழுதியவர் : கயல்விழி (16-Oct-15, 2:55 pm)
பார்வை : 23163

மேலே