எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு கண்மணி, நீ நலமாக இருப்பதாக நேற்று உன்னை...

அன்பு கண்மணி,

நீ நலமாக இருப்பதாக நேற்று உன்னை பார்த்து வந்த  அப்பா கூறினார் மிகவும் மகிழ்ச்சி.  நீ நலமாக  இருப்பதை விட நிம்மதியோ நிறைவோ வேறெதுவும் தந்து விட போவதில்லை எனக்கு.  நாங்களும் நலம். சிறகு விரிக்கும் இளமையில் காலடி வைத்திருக்கிறாய் . பருவ காலம் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் உகந்த காலம் கண்ணே.

என்னடா அம்மா இப்படி கூறுகிறாளே என்றெண்ணாதே . நீ உலகின் முக்கிய சக்தியான 'பெண்'.  நீ பெண்ணாக பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும் உன் அப்பாவிற்கும்.  உனக்கு பெயர் வைக்க போட்டி போட்டு சிந்தித்தோம் எங்களின் சக்தியாக இருக்கும் உனக்கு சக்தி  எனும் பெயரே பொருத்தமானதாக இருக்கும் என்று தேர்வு செய்தோம். எங்க சக்திடா நீ.

இருக்கும் விநாடிகளை அப்படியே ஏற்றுக்கொள்.  எதிர் வர  இருக்கும் பொழுதுகளைக்  கொண்டாடு..  மகிழ்வு மட்டுமல்ல துக்கமும் சேர்ந்தே கொண்டாட  கற்றுக் கொள்.  அதுவாகவே மாறி விடு தெளிவு பிறக்கும். என்றும் குழப்பமான மனநிலை வைத்துக் கொள்ளாதே. நண்பர்களை போற்று. நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இங்கு நண்பர்கள்  என்று கூறியது ஆண் ,பெண் ,திருநங்கை  அனைவரையும்தான் .

நான் வளர்ந்த நாட்களில் எனக்கு  ஆண்  என்பது வேற்றுக்கிரகவாசியாக  உணர்த்தப்பட்டது. வெளி உலக சிந்தனையோ , பரந்த  அறிவோ,  ஆண் பற்றிய புரிதலோ துளியுமின்றிதான் நான் திருமண வாழ்வில்  அடியெடுத்து வைத்தேன். உடல் மன ரீதியிலான எந்த தெளிவும் இல்லை.  இதனால் சில சிக்கல்களும் , சங்கடங்களும் காலங்களோடு கடந்து சென்றது. உனக்கு  அந்நிலை வேண்டாம் என் கண்ணே.  நீ உன் உடலை முழுமையாக உணர்ந்து கொள்.  
மனதை குப்பைக் கூடையாக்காமல் வரும் துன்பங்களை வலிகளைக் கடந்து விடு. அவற்றை பாடமாக வைத்துக் கொள். 

வசந்த காலம் தொடங்கி விட்டது.  வசந்த கால காற்றும் பூக்களும் உன்னை பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன.  உன் நண்பர்களுக்கும் உன்னைச் சுற்றியுள்ள உலகிற்கும் நீ ஒரு சக்தியாகவே இருந்திடு.  உனது,  உன்னுடையது மட்டும் என்று  உயிர்களிடத்தில்  உரிமை,  ஆசை கொள்ளாதே அன்பு மகளே நீ அன்பு செலுத்தும் உயிர் எதுவாயினும் நலம் பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டு பழகிடு.  உனது நட்பு அனைவருக்கும் மதிப்பு மிக்கதாகவும்,  எளிமையானதாகவும்,  இணக்கமானதாகவும் இருக்க வேண்டும்.

உனது மாதவிலக்கு சுழற்சியில் தொடரும் வலிக்கு தற்போது என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டாய்?  இதற்கு  இயற்கை முறையில்  ஆன மருந்து பற்றி  உன் நண்பன் பரிந்துரைத்ததாகக் கூறினாய்.  அவன் கூறிய மருந்து பற்றி  எனக்கு  எழுது நான் இங்குள்ள சித்த வைத்திய சாலையில் விசாரித்து கூறுகிறேன்.

ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பில் காலடி வைத்திருக்கிறாய்.  பாடங்களை விரும்பி புரிந்து மகிழ்வான மனநிலையில் படி.  மதிப்பெண் குதிரையில் ஏறி பயணிக்காதே. 
உன் நண்பர்கள்  அனைவரையும் விசாரித்ததாகக் கூறு. 
உங்கள்  அனைவருக்கும் எனது அன்பும் ஆசியும்.

அன்பு முத்தங்களுடன்
        உன்    அம்மா

பின்குறிப்பு : இங்கு நீ வைத்த ரோஜாச்செடி பூத்திருக்கிறது. ரோஜாக்களுடன் நாங்களும்  உன் வரவை எதிர் நோக்கி. ..


அகராதி 

பதிவு : aharathi
நாள் : 2-Nov-16, 10:55 pm

மேலே