நடமாடும் நதிகள் -24 Mano Red

என்னைப் பாதித்த நிகழ்வுகள்
நடமாடும் நதிகளாகப் பாயும்
நவரச ஹைக்கூக்கள் இவை.
 
1.நகைச்சுவை
-------------------
கொசுவைக் கொன்றபடியே
பக்கத்து வீட்டில் புலம்பினார்கள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை!
 
2.அழுகை
--------------
புடலங்காய் விதைத்தால்
புற்றுநோய் விளைகிறது.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்!
 
3.அவலம்
--------------
நான்கு கைகள் இருந்தும்
தானம் தரவில்லை.
உண்டியல் அருகே கடவுள்!

4.வியப்பு
--------------
ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க
ஆடிக் கொண்டே வருகின்றன
நாளைய பிணங்கள்.
 
5.கருணை
--------------
முன்னாள் தலைவர் சிலை,
எச்சம் போடாமல் சென்றது
நவீன காலத்துக் காக்கை.
 
6.வீரம்
--------------
கொடுமைப்படுத்திய கணவனை
அடித்துக் கொன்றாள் மனைவி.
இப்படியாக முடிந்தது அந்தக் கதை.
 
7.சினம்
--------------
மாணவர்களுக்குப் புரிந்தது
வன்முறைப் பாடம்
போராட்டத்தில் ஆசிரியர்கள்.
 
8.மகிழ்ச்சி
--------------
செய்யாத குற்றத்திற்குச் சிறை.
தீர்ப்புக்குப் பின் சிரித்தான்
அனாதைப் பிச்சைக்காரன்.
 
9.அமைதி
--------------
குழந்தையின் அழுகை கேட்டு
ஊர் நாக்கு அமைதியானது
விபச்சாரிக்கு சுகப்பிரசவம்.

-------------------
இன்று பிப்ரவரி 29 (லீப் வருடம்). யாருக்கும் அமையாத இந்நாளில் எழுத வாய்ப்புக் கொடுத்து, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ‘எழுத்துலக' நண்பர்களுக்கு நன்றி.

எழுதியவர் : மனோ ரெட் (29-Feb-16, 6:51 am)
பார்வை : 661

மேலே