புது ஞாயிறு
செக்கச் சிவந்த செழுங் கதிரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் - புவி
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்
கொக்கரக்கோவெனக் கோழியுங்கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற யிருள் சொல்லாமல் ஓடுது
பத்துத் திசையிலும் - ஜன
சக்தி முழங்கிடுதே! (செக்கச்)
தெற்கில் ஒருகுரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவங்கொண்ட படைபல கூடுது
சிக்கலறுத்துப் பொது நடை போடுது
சொத்தை மனந்திருந்தப் - புதுச்
சத்தம் பிறந்திடுதே! (செக்கச்)
கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே - தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே!
ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே - ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
வெற்றி நெருங்கிடுதே! (செக்கச்)
"ஜனசக்தி"
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
