புது ஞாயிறு

செக்கச் சிவந்த செழுங் கதிரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் - புவி
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்

கொக்கரக்கோவெனக் கோழியுங்கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற யிருள் சொல்லாமல் ஓடுது

பத்துத் திசையிலும் - ஜன
சக்தி முழங்கிடுதே! (செக்கச்)

தெற்கில் ஒருகுரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவங்கொண்ட படைபல கூடுது
சிக்கலறுத்துப் பொது நடை போடுது

சொத்தை மனந்திருந்தப் - புதுச்
சத்தம் பிறந்திடுதே! (செக்கச்)

கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே - தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே!

ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே - ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
வெற்றி நெருங்கிடுதே! (செக்கச்)

"ஜனசக்தி"


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 4:00 pm)
பார்வை : 108


மேலே