மழைநாள் பாதை

மழை நாள்த் திவசம்
தாத்தாவுக்குத் தந்தை
செய்தது.

வீட்டுக் குள்ளே
பெரிய காலித்
தகர டப்பியில்
காற்றின் பேச்சு

கண்ணை மூடிக் கொண்டு
நடக்கும் பழக்கம் உள்ள நான்
ஆசாரத்தை அஞ்சி வீட்டின்
பின் பக்கம் வந்தேன்

கொல்லைச் சுவரின்
புராதன ஈரத்தில்
பளபளக்கும் சுவடு வைத்து
ஊர்ந்தது நத்தை ஒன்று

நத்தைக்குத் தெரியாதா
செங்குத்துச் சுவரென்று
மீண்டும் ஊர்ந்தது
மீண்டும் விழுந்தது

திவசச் சோற்றுக்குக்
காத்திருக்கும் தேவதைகள்
நத்தையைப் பிடித்துதள்ளி
விளையாடுகிறார்கள் பொழுது போக

இன்றும் திவசம்
மழைநாள்த் திவசம்

கடனுக்கும் பட்டினிக்கும் மான
பங்கத்துக்கும் கண்ணீர்
சுரக்காத தந்தை

குலுங்கி அழுது மனம் தேறி
புலன் அடங்கிய திருநாள்

தீ முன் அமர்ந்தேன்
தாத்தாவின் பெயரோடு
தந்தையின் பெயரைப்
பார்ப்பார் சேர்த்தார்

பாத்திரத் தண்ணீரை
மற்றொன்றுக்கு நான்
பாம்புக் கரண்டியால்
மாற்றி ஊற்றுகையில்
முற்றத்துச் சுவரில்
விரலே உடம்பாகி
அதுவே காலான ஒரு சின்ன நத்தை.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:30 pm)
பார்வை : 0


மேலே