கூனுமா தமிழன் வீரம்?

தூற்றினார் தமிழை என்னும்
துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
எழும்! பகை ஓட்டி வைக்கும்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:53 pm)
பார்வை : 77


பிரபல கவிஞர்கள்

மேலே