எக்களிப்பு

குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:53 pm)
பார்வை : 68


மேலே