நில்லடா தம்பி!

முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்!
நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன!
காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்!
தேய்ந்த வீரம் திரும்பி வந்தது!
நில்லடா தம்பி! நெருப்பில் நீநட!
கொல்லும் சாவினைக் கூப்பிட் டழைப்பாய்!
போனாலும் உயிர் போய்த் தொலையட்டும்...
மானம் காத்து மண்டையைப் போடு!
தமிழன் நாட்டைத் தமிழன் ஆளும்
அமிழ்தப் பொன்னாள் இந்நாள் மலர்க!
வெள்ளமே! விரைந்துவா! விடுதலை
கொள்ளும் நாளைக் கொண்டு வருகவே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:43 pm)
பார்வை : 27


பிரபல கவிஞர்கள்

மேலே