இப்போது நான் மீண்டும்

இப்போது நான் மீண்டும்
நண்ப, எனக்கு உறக்கமில்லை
இருளின் செழுமை சேர்த்து
ரகசிய அறைகளில் நெசவாகிக்கொண்டிருக்கும்
இனங்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
இன்று அதிகாலை வாசல் கதவைத் திறந்தபோது
எதிரே சீரழிவின் துள்ளி மறியும் கோலம் ஒன்று
இன்றுவரை (உன்) அன்பைச் சொல்வதில்
தோல்வியே தொடர்கிறது
அன்பு என்பது ஆபத்து
இசை என்பது அவசரம்
கலை என்பது கொலை
அச்சுக் காட்டில் முளைத்து நிற்கும்
அறிவின் அகங்காரம்
கண்ணீரைத் துடைக்க முடியாது
(என்) துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்கமுடியும்
சதா ஒரு சத்தம்
செவிப்பறையைத் துளைக்கும் இரைச்சல்
சந்தடி: அவலங்களின் கோலங்கள்
நடுநெஞ்சில் அவலம் பீறிட்டது
மீண்டும் இறந்தேன் நேற்று
ஆனால், வருவேன் மீண்டும்
வருவேன் என்று என் முன் சொன்னவன்
வந்த பின் வருவேன் நான்.


கவிஞர் : சுந்தர ராமசாமி(2-Nov-11, 6:02 pm)
பார்வை : 97


பிரபல கவிஞர்கள்

மேலே