குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து,காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட,நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்தநின்று,சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே
நீலக் குயிலிருந்து நீண்டகதை சொல்லுவதும,
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன்,வெகுண்டேன்,கலக்கமுற்றேன்;நெஞ்சிலனல்
கொண்டேன்,குமைந்தேன்,குமுறினேன்,மெய்வெயர்த்தேன்;
கொல்லவாள் வீசல் குறித்தேன்.‘இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சி’யென

முன்போல் மறைந்துநின்றேன்;மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு,குயிலாங்கே கூறுவதாம்;“நந்தியே!
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே!மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுடோ?
மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார்.
காளயர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்,
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,
மிஞ்சுப் புறச்சுமையும்,வீரத் திருவாலும்,
வானத் திடிபோல ‘மா’வென் றுறுமுவதும்,

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்,பல்
காலம்நான் கண்டு கடுமோக மாய்விட்டேன்.
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத

சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,
மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்
சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி

என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில்
போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே

சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை.

மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ,
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்!
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர்,மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே,பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்,

வாலிலடி பட்டு மனமகிழ்வேன்,‘மா’வென்றே
ஒலிடு நும் பேரொலியோ டொன்று படக் கத்துவேன்
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்,

கானிடையே சுற்றிக் கழனியெல்லாம் மேய்ந்து,நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்.
காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்.
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்.

ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்,
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?
ஒஒதத குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்.
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ?
தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ?

காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசைதான் வெட்கம் அறியுமோ?”என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே.

காதல்,காதல்,காதல்;
காதல் போயிற் காதல் போயிற்,
சாதல்,சாதல்,சாதல்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 2:14 pm)
பார்வை : 20


மேலே