திரிபுகள்

சங்கீதம்

இரைச்சலின் கூட்டணியாய்

கவிதை

இருண்மையின் திமிராய்

கலை

விலைமகளின் உதட்டுச்சாயமாய்

மதம்

கடவுள் விற்கும் கள்ளச்சந்தையாய்

அன்பு

பணத்தின் புன்னகையாய்

அழகு

பிணத்தின் நிர்வாணமாய்

காதல்

சந்தர்ப்பங்களின் ரகளையாய்

இல்லறம்

காதலின் சமாதியாய்

புணர்ச்சி

தூக்கம் அழைக்கும் உடற்பயிற்சியாய்

இருத்தல்

சாகப் பயந்தவர்களின் சம்மதமாய்

கல்வி

இருதயம் கொன்று வயிற்றில் புதைக்கும் ஏற்பாடாய்

இயற்கை

வருடம் ஒரு முறை வாழ்த்து மடல் ஓவியமாய்

சட்டம்

ரூபாய்க்குத் திறக்கும் ஜன்னலாய்

நீதி

டாலருக்குத் திறக்கும் கதவாய்

இளமை

உடல் கொல்லும் இன்பமாய்

முதுமை

இன்பம் கொன்ற உடலாய்



திரிந்தும் பிறழ்ந்தும்

தேய்ந்த பின்றை

புளித்த சாராயம் ஆகாதா என்ன

வாழ்வெனும்

அமிர்தம் !


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 4:33 pm)
பார்வை : 45


பிரபல கவிஞர்கள்

மேலே