மதமும் யாகங்களும்.

மதத்தின் பெயரால் ''கடவுள் வழிபாடு'' என்று கருதப்படும் அக்கிரமச் செயல்கள் பலவற்றுள் 'யாகம்' செய்வதும் ஒன்று, இது ஒரு கொடிய பாதகச் செயலாகும், ஏனெனில், யாகத்தில் பிராணிகளை இம்சிக்கின்றார்கள்.இது பார்பனர்களால் கடவுள் வழிபாடாக நடந்து வருகின்றது.

அஸ்வமேதம், அஜமேதம், கோமேதம், முதலான யாகங்களில் ஒன்றும் அறியாத அபல பிராணிகளான, குதிரை, ஆடு, மாடு முதலான ஜீவன்களை கொலை செய்கின்றார்கள், உலகில் கொலை செய்வதைவிட கடினகர்மம் வேறு ஒன்றுமில்லை என்பது மகான்களின் அபிப்பிராயம்

பூர்வத்தில் மனிதனையும் பலியிடும் வழக்கம் இருந்ததாக சரித்திரங்கள் மூலம் அறிகின்றோம், ஆரியர்கள் நம் நாட்டிற்குள் வருவதற்கு முன் நம் தேசம் அறிவிலும் ஒழுக்கத்திலும் சமத்வ சகோதரத் தனையிலும், ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கியிருந்தது என்பதை தொல்காப்பியம் முதலான பழம் தமிழ் நூல்களால் அறியக்கூடும்.

ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் அவர்களின் பழக்கவழக்கங்கள் நம் நாட்டில் புகுந்துவிட்டதால் கடவுளின் பெயரால் பலியிடும் வழக்கத்தை நம்மவர்களும் பழகிகொண்டார்கள், இதை சில கோவில்களில் நிகழும் கொலைகளால் நிச்சயிக்கலாம்.

கடவுளின் பெயரால் நாதனில்லாத அபல பிராணிகளை யாகத்தில் பலியிடுவத்தின் கருத்து என்ன என்பது தெரியவில்லை,

கடவுளின் கருணைக்கு பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இக்காரியங்கள் செய்யப்படுகின்றன, பிராணிகளெல்லாம் அவருடைய சந்ததிகளாய் இருக்கின்றன எனச் சொல்பவர்களே அவருடைய சந்ததிகளை அறுத்து அவருக்கே நிவேதனமாக செய்வதென்றால் அதில் அவருக்கு சம்மதம் இருக்க முடியுமா?

விசேச புத்தில்லாத புலி, கரடி முதலான துஷ்ட ஜந்துகளும் தங்கள் குட்டிகளை அறுக்கவோ, அறுத்துக்கொடுத்தால் ஏற்றுக்கொள்ளவோ செய்வதில்லை, பகுத்தறிவு இல்லாத துஷ்ட ஜந்துகளைவிட ஞானமில்லாதவனும் துச்சமான மாமிசத்தில் பிரியமுள்ளவனும், புலியைவிட பெரிய புலியாய் இருப்பவனும்தானே நமது தெய்வம்?

கடவுளுக்கு ஏதாவது காய்ச்சல் பிடித்துவிட்டதா? தேகம் மெலிந்துவிட்டதா? அல்லது அவர் ஆடு கோழி முதலான பிராணிகளை திருடித்தின்னும் குள்ளநரி கூட்டத்தை சேர்ந்தவரா? எந்த காரணத்தை கொண்டு பிராணிகளை இம்சித்து கடவுளுக்காக மாமிசத்தை வைத்து ஆராதிக்கிறீர்களோ? யாம் அறியோம்.

யாகம் செய்வது கடவுளுக்கு அல்ல என்றும் தேவர்களுக்காக செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றார்கள், தேவர்கள் அமுதத்தை அருந்தி ஜரைநாரைகளை நீக்கினவர்கள் என்று புராணங்களில் காணப்படுகின்றன.

ஆகையால் அமிர்தத்தை உண்டவர்கள் அசிங்கமான மாமிசத்தை உண்ணமாட்டார்கள், மேலும் மாமிச உணவு இராச்சசர்களுக்கு ஏற்பட்டதென்றும் அதை தேவர்கள் உண்ணமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது, ஒரு வேலை பூதேவர் (பிராமணர்) களுக்கு சாப்பிட வேண்டி ஏற்பட்டு இருக்கலாம், அதற்காக அவர்கள் கடவுள் பெயரையும் மதத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு இவ்வித தந்திரங்களை செய்கிறார்கள் என்றுதான் நிச்சயிக்க வேண்டி இருக்கிறது.

அதாவது சு. ''த்விஜைர் போகரதைர் வேதே, தர்சிதம் ஹிம்சனம் பசோஜி ஹவாஸ் வாபதரை, காமா, அகிம்சைவ பரம்மத'' என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதன் கருத்து ;- ''விஷயங்களில் ஆசையுள்ளவர்களும் நாக்கின் ருசியை மட்டும் கருதுவோருமாகிய சில பிராமணர்கள் யாகத்தில் பசு ஹிம்சை செய்யவேண்டுமென்று வேதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள் அகிம்சையைவிட உத்தம தர்மமாம் வேறு ஒன்றுமில்லை '' என்பதாம்.

இந்த சுலோகத்தில் கருத்தை பார்க்கும்போது, வேதத்தில் பார்ப்பனர்கள் அநேகம் தகாத செய்கைகளை தங்கள் சுயநலத்திற்காக எழுதி வைத்து இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

அநேக வருடங்களாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதில் யாகம் செய்வதும் ஒரு தந்திர செய்கையாகும், மற்ற செய்கைகளால் அதிகப் பணம் கிடைக்காது, யாகம் செய்வதால் அதிகப் பணம் கிடைக்கின்றது.

யாகம் செய்ய வேண்டுமானால் 5000, 10000 ஏன்? இவ்வுலகம் முழுவதையும் தானம் வாங்கவும் உரிமையுண்டு, என்ன ஏமாற்றம்! மதத்திற்கும் கடவுளுக்கும் அவமானத்தை உண்டுபண்ணும் இத்தகைய கொடுமையான செய்கைகளை வேதம் வேதமென்று எழுதி வைத்து ஜனங்களின் தனத்தை கொள்ளையடிப்பதோடு அல்லாமல் அறிவையும் கெடுத்து மூட நம்பிக்கைக்குள் மூழ்கடிக்கும்படி செய்துள்ளார்களே..!

அநியாயம்! யாகத்தில் செய்யும் ஜீவா இம்சையை ஒழிப்பதற்காக விஷ்ணு பகவான் புத்தவதாரமாக வந்திருக்கிறார் என்று இந்துக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகவான் புத்தர் இதற்காக எவ்வளவோ பாடுபட்டார், ''அகிம்ஷா பரமோ தர்ம'' என்ற சிறந்த உபதேசத்தை உபதேசித்தார், என்ன பயன் ஏற்பட்டது, மகாத்மாவும் ஞானியும் தயாளுவுமான புத்தரின் மதத்தை நாட்டிலிருந்து முடக்கிவிட்டவர்கள் அல்லவா நம் ஆசாமிகள், இதுதான் இந்து மதத்தின் பெருமை.

முற்காலத்தில் ராவணன் தன்னுடைய சிரசுகளை அறுத்து யாகத்தில் ஹோமித்து விட்டதனால் கடவுள் தோன்றி வேண்டிய வரங்களை அளித்தார் என்று புராணங்களில் காண்கிறோம், யாகம் செய்வோர் அவ்வண்ணமே தங்கள் சிரசுகளை வெட்டி கடவுளுக்கு அர்ப்பணம் செய்தால் சீக்கிரத்தில் கடவுள் தோன்றி வேண்டிய வரங்களை அளித்து கருணை புரிவார் அல்லவா?

அங்ஙனம் செய்யாமல் ஒன்றுமறியா பிராணிகளை கடவுளின் பெயரால் ஏன் கொலை புரிகின்றனர்? இதுதான் சனாதன தர்மமா?

கடவுளுக்கும் மகான்களுக்கும் மதத்திற்கும் திருப்திகரமாய் இல்லாத இத்தகைய பாவச்செயல் இக்காலத்திலும் செய்து வருகிறார்கள், என்ன அநீதி! இதனால் கடவுளின் கருணையைத் தேடுவோர் குளிக்கபோய் சேற்றையள்ளி பூசிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

இதை போன்ற ஆபாச கிரியைகளையும்தான் ''குடி அரசு'' வேண்டாம் என்று சொல்வது, மதம் போச்சு என்று சொல்லவேண்டாம், மதத்திடம் பற்றுள்ளவர்கள் இத்தகைய ஆபாச கொள்கைகளை கண்டித்து ஜனங்களின் சுய மரியாதையை காப்பாற்ற நல்வழியில் முயற்சி செய்ய வேண்டும், அதற்கு சாத்தியமில்லை என்று கருதுவோர், இத்தகைய ஆபாசங்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும், அதுவும் முடியாதென்றால் மக்களின் முன்னேற்றத்தை கருதி உழைப்பவர்களை எதிர்க்காமலாவது இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

************

குடி அரசு - கட்டுரை - 22-05-1928
தந்தை பெரியார்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்-தொகுதி 6.
பக்கம் - 214,215,216,217

நன்றி
குடி அரசு.

எழுதியவர் : தந்தை பெரியார். (15-Jun-13, 4:43 pm)
பார்வை : 90

மேலே