சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும் - பகுதி -2.

நிற்க ;.
********** இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும் இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களும், மடாதிபதிகளும், மூர்த்தி ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுளைப்பற்றி பாடின பாட்டுக்களையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும் நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் வருடம் சுமார் 20 கோடி ரூபாய்களை பாழாக்கிக்கொண்டு இருக்கிறோம்.

இவ்விருபது கூடி ரூபாய்கள், இம்மாதிரியாக பாழாக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமேயானால், நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்ச்சக்கணக்கான மக்களை நாட்டைவிட்டு அன்னியநாட்டிற்கு கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா?

அன்றியும், தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா?

தீண்டகூடாத நெருங்ககூடாத - பார்க்ககூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாய் இருந்து கொண்டிருக்க முடியுமா?

100 க்கு மூன்று பேர்களாய் இருக்கும் பார்பனர்கள் மற்ற 100 க்கு 97 பேர்களை சண்டாளர், மிலோச்சர், சூத்திரர், வேசிமக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு, அட்டை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும் நம் நாட்டையும் அன்னியனுக்கு காட்டிக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

நமக்கு கல்வி இல்லாததற்கு சர்கார்மீது குற்றம் சொல்வதில் கவலை கொள்கின்றோமேயல்லாமல், நம் சாமியும், பூதமும், சமயமும், நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளைகொண்டு இருப்பதைப்பற்றி யாராவது கவலை கொள்கின்றோமா என்று கேட்கிறோம்.

நிற்க
************ ''அன்பையோ அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால் உனக்கு என்னத் தடை?'' என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, ''கடவுள்களாகவோதான்'' இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே யொழிய, வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.

இது போலவேதான், ''மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும், மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளை கொண்டது'' என்பவர்களிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராறு இல்லை.

''அன்பே சிவம், சிவமே அன்பு, என்பதான சிவனிடத்தில் நமக்கு சண்டையில்லை, அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பை கைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம்'' என்பதானால் நாமும் ஒரு சைவனாகவும், அதன் மூலம் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம்.

அதுபோலவே, ''ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கும் உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு; அக்குணங்களை கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்'' என்பதான விஷ்ணு விடத்திலும் வைணவனிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராரில்லை என்று சொல்வதோடு, நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம், நமக்கும் உள்ள மக்களுக்கும் அச் ''சைவத்தன்மை'' ''வைனவத்தன்மை'' யும் ஏற்பட வேண்டும் என்றும் தவங்கிடக்கின்றோம்.

அப்படி இல்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவந்தான் இன்னமாதிரியான உடைபாவனை கொண்டவனாகவும், இன்ன மாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுகளைப்பற்றி பாடின, எழுதின ஆசாமிகளையும், புத்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றப்படி வேறு இன்ன உருவமோ பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும், வேறு குறி இடுகின்றவர்களையும், யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதாவர் என்று சொல்லுகின்ற கொள்ளைக்காரரிடமே நமக்கு பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன், அக்கொள்கைகளையும், அச்சமயங்களையும், அக்கடவுள்களையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.


************* தொடரும்.

1.07.1928 குடி அரசு.
தந்தை பெரியார் எழுதியது.

நன்றி;-
''பெரியார் களஞ்சியம்'' - பக்கம் 14,15,16,17.
பெரியார் களஞ்சியத்தை தொகுத்து
வெளியிட்டவர் கீ. வீரமணி

எழுதியவர் : தந்தை பெரியார். (24-Jun-13, 10:15 am)
பார்வை : 61

மேலே