தேர்தல் கவிஞர் இரா இரவி

தேர்தல் ! கவிஞர் இரா .இரவி !

மூட நம்பிக்கைகளில்
ஒன்றானது
தேர்தல் அறிக்கை !

பார்த்து எழுதுவதில் மாணவர்களை விஞ்சினர்
அரசியல்வாதிகள்
தேர்தல் அறிக்கை !

வென்றதும் வென்றவர்
முதலில் மறப்பது
தேர்தல் அறிக்கை !

வில்லாய் வளைப்போம் வானத்தை
கயிறாகத் திரிப்போம் மணலை
தேர்தல் அறிக்கை !

நிருபித்தனர்
வாய்ச்சொல் வீரர்கள் என்பதை
தேர்தல் அறிக்கை !

தேன் வந்து பாயுது காதினிலே
தேர்தல் அறிக்கை படிக்கையிலே
நடந்தால் நல்லது உண்மையிலே !

சட்டம் இயற்றுங்கள்
தேர்தல் அறிக்கை நிறைவேற்றாவிடில்
தண்டனை உறுதி என்று !

கோடையின் கொடுமையை விஞ்சியது
அரசியல்வாதிகளின் கொடுமை
தேர்தல் பிரச்சாரம் !

எல்லோரும் சொல்கின்றனர்
மதுவிலக்கு
எப்படி வந்தன மதுக்கடைகள் ?

விலகவில்லை
எந்த ஆட்சியிலும்
வறுமை இருட்டு !

அழிப்போம் என்று சொல்லி
நிரந்தமாக்கினர்
வறுமைக்கோடு !

சின்ன மீன் போட்டு
பெரிய மீன் பிடிப்பு
அரசியல் !

செய்யாதே செலவு ! தேர்தல் ஆணையம்
எவ்வளவு செய்வாய் செலவு ? கட்சி
குழப்பத்தில் வேட்பாளர் !

யாரைத்தான் நம்புவது
குழப்பத்தில் தவிப்பு
வாக்காளர் !

முகத்தில் கரி பூசி
ஏமாற்றுவதற்கு முன்னோட்டம்
விரலில் மை !

குடவோலைத் தேர்தலில்
குற்றவாளிகள் நிற்க முடியாதாம்
நடைமுறைப்படுத்துவோம் !

சரியாகவே சொன்னார்
சிந்தனைச்சிற்பி பெரியார்
அரசியல் பற்றி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Apr-16, 7:52 pm)
பார்வை : 71

மேலே