கலைமகள் துதி

திருமலைராயன் தன் அவையிடத்தே வந்த கவிஞருக்கு இருக்கை தந்து உபசரியாமல் அலட்சியப் படுத்தினான். கலைவாணியின் அருளால் அவனுடைய சிம்மாசனமே வளர்ந்து பெருகிக் காளமேகத்திற்கு இடங்கொடுத்தது. கலைவாணியின் அந்த அருளை நினைந்து சொல்லிய செய்யுள் இது.

நேரிசை வெண்பா

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். 2 - கவி காளமேகம்

பொருளுரை:

வெள்ளை நிற ஆடையை உடுத்தவளாகவும், வெண்ணிற அணிகளைப் பூண்டவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவினிலே வீற்றிருப்பவளான கலைவாணியே!

மாசற்ற சிம்மாசனத்திலே அரசராகிய இத் திருமலை ராயனோடு என்னையும் சமநிலையிலே வீற்றிருக்கும் படியாக அருளிச் செய்த தாயாவாள். அவள் மலரடியைப் போற்றுகின்றேன்' என்பது கருத்து.

தம்மை மதித்து உபசரியாத மன்னவன் நாணுமாறு அவனுக்குச் சரியாகத் தம்மை அமரவைத்த கலைவாணியைத் துதிக்கிறார். கலைவாணியின் அருள் தமக்கு இருக்கிறதென்ற உண்மையை அரசனும் அந்த அவையினரும் அறியப் புலப்படுத்தியதும் ஆகும்.

தன் மகன் துயருறக் காணப்பொறுக்காத தாய்மை உளத்தினையே கலைவாணியும் அவ்விடத்தே மேற்கொண்டாளாதாலால் அவளையும் 'தாய்’ என்றனர். ’அரசரோடு சரியாசனம் வைத்த’ என்றதால், பிற புலவர்களைக் காட்டிலுந் தம்மை உயர்த்தி வைத்த சிறப்பையும் வியந்து நன்றி பாராட்டுகிறார் எனலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-20, 3:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே