காக்கைக்கு....!

தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும்
உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்;
பாடத் தெரியாப் பறவையே! காக்கையே!
காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின்
பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற
வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன்
வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ
முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்!

என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்?
‘என்னைக்கா’ என்றோ இயம்புவாய்? மாட்டாயே!
எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால்
உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான்
கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக்
கா என்பாய் போலும்! கருங்குயிலின் அண்ணனே!


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:31 pm)
பார்வை : 43


மேலே