மூன்று காதல்

பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா! 1

ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ? மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!
2

ஆற்றங் கரைதனிலே -- தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், -- அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே ?அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, -- இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! 3

சித்தந் தளர்ந்ததுண்டோ? -- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் -- பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் -- வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4


இரண்டாவது -- லக்ஷ்மி காதல்

[ராகம்-ஸ்ரீ ராகம்] [தாளம்-திஸ்ர ஏகம்]

இந்த நிலையினிலே -- அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் -- அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் -- அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தின முதலா -- நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! 5

புன்னகை செய்திடுவாள், -- அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சறறென்
முன்னின்று பார்த்திடுவாள், -- அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர்
என்ன பிழைகள் கண்டோ -- அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள் அங்கு
சின்னமும் பின்னமுமா -- மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! 6

காட்டு வழிகளிலே, -- மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே
நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே, -- சில
வீரரிடத்திலும், வேந்தரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் -- கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா! 7


மூன்றாவது -- காளி காதல்

[ராகம் -- புன்னாகவராளி] [தாளம்-திஸ்ர ஏகம்]

பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:17 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே