விதை முளையும் யோனி

விதையுடன் கூடிய சிறு செடியொன்று
யோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*
வரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து
எமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று
சூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை
வரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு
ஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது
அதைத் தொடரச் சொல்கிறது
மறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை
காலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது
இன்னும் உறையாத இரத்தத்தை
அது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
இன்னொரு நாளை எப்படித் தொடங்குவது
என்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது
சூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற
தாவரத்தைப் பிரசவிக்கும்
பலமுலைப் பெண்கள் நாமென்று

தன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து
அத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க

அவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:57 pm)
பார்வை : 0


மேலே