தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் -- இனி -- அஞ்சிடோம்;
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? -- தெய்வம் -- பார்க்குமோ? 1

பு{ ‘கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம்பிள்ளை சொல்லிய மறுமொழி’ என்பது ‘ஜன்ம பூமி’ தலைப்பு.}

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் -- முடி -- தாழ்த்துவோம்;
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? -- அவ -- மானமோ? 2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டு
போகவோ? -- நாங்கள் -- சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ? -- உயிர் -- வெல்லமோ? 3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ -- பன்றிச் -- சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோஇது
நீதமோ? -- பிடி -- வாதமோ? 4

பாரத தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? -- மனஸ் -- தாபமோ?
கூறு எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ -- இதில் -- செற்றமோ? 5

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் -- நன்கு -- தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவுறோம் -- சித்தம் -- கலைவுறோம். 6

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? -- ஜீவன் -- ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? -- நெஞ்சம் -- வேகுமோ?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:55 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே