நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சில் உரமுமின்றி்
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ -- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ. 1

கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ -- கிளியே
நாளில் மறப்பா ரடீ. 2

சொந்த அரசும்புவிச்
சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? -- கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ? 3

கண்கள் இரண்டிருந்தும்
காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ -- கிளியே
பேசிப் பயனென் னடீ. 4

யந்திர சாலையென்பர்
எங்கள் துணிகளென்பர்
மந்திரத்தாலே யெங்கும் -- கிளியே
மாங்கனி வீழ்வ துண்டோ? 5

உப்பென்றும் சீனிஎன்றும்
உள்நாட்டுச் சேலைஎன்றும்
செப்பித் திரிவா ரடீ -- கிளியே
செய்வ தறியா ரடீ. 6

தேவியர் மானம் என்றும்
தெய்வத்தின் பக்திஎன்றும்
நாவினாற் சொல்வ தல்லால் -- கிளியே
நம்புத லற்றா ரடீ.
7

மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் -- கிளியே
பேணி யிருந்தா ரடீ. 8

தேவி கோயிலிற் சென்று
தீமை பிறர்கள்செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் -- கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ. 9

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ -- கிளியே
ஊமைச் சனங்க ளடீ. 10

ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -- கிளியே
வாழத் தகுதி யுண்டோ? 11

மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் -- கிளியே
இருக்க நிலைமை யுண்டோ? 12

சிந்தையிற் கள்விரும்பிச்
சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார் -- கிளியே
மனதி லதனைக் கொள்ளார். 13

பழமை பழமையென்று
பாவனை பேசலன்றியன
பழமை இருந்தநிலை -- கிளியே
பாமர ரேதறிவார்? 14

நாட்டில் அவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே -- கிளியே
சிறுமை யடைவா ரடீ. 15

சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ -- கிளியே
செம்மை மறந்தா ரடீ. 16

பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் -- கிளியே
சோம்பிக் கிடப்பா ரடீ. 17

தாயைக் கொல்லும்பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா -- கிளியே
வந்தே மாதர மென்பார்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:57 pm)
பார்வை : 0


மேலே