மஹாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்கநீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க! வாழ்க! 1

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார்
விடுதலை யார்ந்து செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி,
ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்
புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! 2

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் காக்கும் குடைசெய்தான்
என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்! 3

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்! 4

பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்,
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:59 pm)
பார்வை : 0


மேலே