பல்வகைப் பாடல்கள் மழை

திக்குக்கள் எட்டுஞ் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்துவெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்றுதக்கத
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட 1

வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா! 2

அண்டம் குலுங்குது, தம்பி!தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல
மிண்டிக் குதித்திடு கின்றான்; திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர
செண்டு புடைத்திடு கின்றார்; என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம், கண்டோம், கண்டோம் இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:35 pm)
பார்வை : 0


மேலே