தமிழியக்கம் - குடும்பத்தார்!

அன்னை தந்த பால்ஒழுகும்
குழந்தைவாய் தேன்ஒழுக
அம்மா என்று

சொன்னதுவும் தமிழன்றோ!
அக்குழந்தை செவியினிலே
தோய்ந்த தான

பொன்மொழியும் தமிழன்றோ!
புதிதுபுதி தாய்க்கண்ட
பொருளி னோடு

மின்னியதும் தமிழன்றோ!
விளையாட்டுக்கிளிப் பேச்சும்
தமிழே யன்றோ!

வானத்து வெண்ணிலவும்
வையத்தின் ஒவியமும்
தரும் வியப்பைத்

தேனொக்கப் பொழிந்ததுவும்
தமிழன்றோ! தெருவிலுறு
மக்கள் தந்த

ஊனுக்குள் உணர்வேயும்
தமிழன்றோ! வெளியேயும்
உள்ளத் துள்ளும்

தான் நத்தும் அனைத்துமே
காட்சி தரும் வாயிலெலாம்
தமிழே யன்றோ

திருமிக்க தமிழகத்தின்
குடும்பத்தீர்! இல்லறத்தீர்!
செந் தமிழ்க்கே

வருமிக்க தீமையினை
எதிர்த்திடுவீர் நெஞ்சாலும்
வாய்மெய் யாலும்!

பொருள் மிக்க தமிழ்மொழிக்குப்
புரிந்திடுவீர் நற்றொண்டு,
புரியா ராயின்,

இருள்மிக்க தாகிவிடும்
தமிழ் நாடும் தமிழர்களின்
இனிய வாழ்வும்!

காக்கை "கா" என்றுதனைக்
காப்பாற்றச் சொல்லும்! ஒரு
கருமு கில்தான்,

நோக்கியே "கடமடா"
என்றேதன் கடனுரைக்கும்
நுண்கண் கிள்ளை

வாய்க்கும் வகை "அக்கா" என்
றழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை "ஞாம் ஞாம்" (நாம்)

காக்கின்றோம் எனச் சொல்லக்
கழுதை அதை "ஏ" என்று
கடிந்து கூறும்.

"கூ" எனவே வையத்தின்
பேர் உரைத்துக் குயில் கூவும்
"வாழ் வாழ்" என்று

நாவினிக்க நாய் வாழ்த்தும்
நற்சேவல் "கோ" என்று
வேந்தன் பேரைப்

பாவிசைத்தாற் போலிசைக்க,
வருங்காற்றே "ஆம்" என்று
பழிச்சும்! இங்கு

யாவினுமே தமிழல்லால்
இயற்கை தரும் மொழிவேறொன்
றில்லை யன்றோ


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 7:00 pm)
பார்வை : 57


பிரபல கவிஞர்கள்

மேலே