உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?

ஒவ்வொரு நாளும் அவன்
ஒரு பெண்ணாக மாறிக்கொண்டே இருந்தான்
பெண்ணின் அடையாளங்களை முதலில்
புற உடலில் வரைந்து கொண்டான்
உடலின் வரைபடத்தில் நீர் ஓவியத்தைப்போல
காமத்தின் எழுச்சிகளும் வரையப்பட்டிருந்தன
கண்குழியில் ஆழக்கடலின் ரகசியங்களை
பொதிந்து கொண்டான்
உணர்ச்சியின் நீரோட்டங்களை
ஆறாகப் பெருக விட்டான் உடல் சமவெளியில்
விறைத்த குறியை அதன் ஆண்மைய முட்களை
அறுத்தெறிந்து சமனப்படுத்திக் கொண்டான்
இப்பொழுதிருந்து அவனை அவள் என்றே
அழைக்கலாம் என்று அறிவித்துக் கொண்டாள்

நம்பிக்கையின் தாரகைகள் முளைத்து
உடல் ஒரு வானமாக எழுந்தது
அதன் உயரத்திற்கு சிறகுகள் விரித்து
பறந்து கொண்டேயிருக்கும் அனுபவத்தைப்
பேசி பேசியே தன் குஞ்சுகளையும் வளர்க்கிறாள்
இப்பொழுதும் அவள் என்னைக் கண்டால் கேட்பது
என்னிடம் போல் உன்னிடம் உண்டா ஓர் அரண்மனை?


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:50 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே