தமிழ்க் கன்னி தோற்றம்

எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்....


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:40 pm)
பார்வை : 194


மேலே