காக்கை

காக்கையை எனக்குத் தெரியும்
யாருக்குத்தான் தெரியாது. ஆனால்
இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது.

எனக்கு நேரே ஏதோ என்னிடம்
பேச வந்தாற் போலப் பரபரப்பில்
அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை

ஊரில் எனது குடும்பத்தினருக்குப்
பழக்கமுள்ள காக்கை ஒன்று
எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை
எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப்
பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம்

இந்தக் காக்கை என்ன செய்யுமோ ?
காலும் உடம்பும் கழுத்தின் நிறமும்…
அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது

காக்கையின் மூக்கில் மெல்லிய இரும்புக்
கம்பிகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன

நாற்பது வயதில் மூன்று தடவைகள்
சிறகால் அடித்த அவற்றையே என்னால்
அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை

மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை
எனக்கு நேரே வந்தமர்ந்தால்
தெரிந்து கொள்ள முடியுமா என்னால் ?
முடியும் என்பது சந்தேகந்தான்
ஏனெனில் காக்கையை யாரும்
முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:32 pm)
பார்வை : 0


மேலே