பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த 
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், 
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் 
      அஞ்சாத பொருளில்லை அவனியிலே; 
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த 
      மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; 
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் 
      துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.	 
	
மந்திர வாதி என்பார்-சொன்ன 
     	மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்; 
யந்திர சூனியங் கள்-இன்னும் 
      எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! 
தந்த பொருளைக் கொண்டே-ஜனம் 
      தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; 
அந்த அரசிய லை-இவர்
      அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார்
சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச் 
      சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்; 
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு 
      தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்; 
அப்பால் எவனோ செல்வான்-அவன் 
      ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்; 
எப்போதும் கைகட்டு வார்-இவர் 
     	யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார்	
நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த 
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால், 
கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒரு 
      கோடிஎன் றால் அது பெரிதா மோ? 
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன் 
      ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால் 
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு 
      நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார்.
சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச் 
      சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு 
      கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார் 
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் 
      சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன் 
      அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார்.	
	
நெஞ்சு பொறுக்கு திலையே-இதை 
      நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே 
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் 
      காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார். 
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம் 
     	பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே 
துஞ்சி மடிக்கின் றாரே-இவர் 
      துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே	
எண்ணிலா நோயுடை யார்-இவர் 
      எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார் 
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் 
      காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்; 
நண்ணிய பெருங்கலை கள்-பத்து 
      நாலாயிரங் கோடி நயந்துநின் ற 
புண்ணிய நாட்டினி லே-இவர் 
      பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்