கண்ணன் -என் தோழன்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே-இனி
என்ன வழியென்று கேட்சில்,உபாயம்
இருகணத் தேயுரைப் பான்;-அந்தக்
“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன்-வந்திங்கு
உன்னை யடைந்தனன்”என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்.
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்;-பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்;-என்தன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்;-நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாமொரு
பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை,பசி நேரத் துணவென்தன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்;-எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான்;-என்தன்
காட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்உணர் வான்;-அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித்திடு வான்;-நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்;-சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும்-பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
சிரித்துக் களித்திடு வான்;-நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான்;-அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடு வான்;-கண்ணன்
தன்னை யிழந்து விடில்,ஐயகோ;பின்
சகத்தினில் வாழ்வதி லேன்

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துத்
குலுங்கிடச் செய்திடு வான்;-மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளர்த்திடச் செய்திடு வான்;-பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்;-சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வரும்
தீமைகள் கொன்றிடு வான்

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடு வான்;-அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்;-நல்ல
பெண்மைக் குணமுடை யான்;-சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;மிகத்
தண்மைக் குணமுடையான்;சில நேரம்
தழலின் குணமுடை யான்.

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிகத் தானுடை யான்;-கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்;-என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடு வான்;-கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்.

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில்-பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்;-உயிர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்;-நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 12:17 pm)
பார்வை : 17


மேலே